Sunday, 20 October 2013

20.10.2013 ல் நாகுடி எக்சலண்ட் பள்ளியில் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய காவிரி கவிபெருக்கு கலை இலக்கியச் சந்திப்பு மாவட்டச் செயலாளர் தோழர். க.அஜய்குமார்கோஷ் தலைமையில் நடைபெற்றது. அம் மாமன்றத்தில் நான் பகிர்ந்து கொண்ட கவிதை இது. தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ''தன்னிகர் இல்லா தமிழ் தடாகம் என்ற விருதினை எனக்கு வழங்கி என்னை கௌரவித்தது. இந் நாள் என்னால் மறக்க முடியாத நாள்



இளைஞனே சாதி நீ சாதி

கரை புரண்டு வரும் காவிரியைப்பற்றி
கவி புனைந்து வந்திருக்கும் இளைஞர்களே
உங்கள் கவிதை வெள்ளம்
காவிரி போல் பொங்கட்டும்
கவிமழையில் இவ் வரங்கமே நனையட்டும்
கருத்துச்சாரல் காவிரி போல் எம்மை குளிர்விக்கட்டும்

நான் வயதில் மூத்தவன் - ஆனால்
மனதால் இளையவன்
எனக்குள்ளும் ஒரு சாதனை உண்டு - ஆகவே
நானும் ஒருவிதத்தில் இளைஞன் தான்

அரசு எனக்கு பணி ஓய்வுதந்து விட்டது - ஏனென்றால்
அகவை எனக்கு ஐம்பத்தெட்டு - ஆனால்
காற்றுக்கென்ன ஓய்வு
கடல் அலைக்கு எங்கே ஓய்வு

காதலுக்கு கண்கள் மட்டுமா இல்லை
காதலுக்கு வயதும் இல்லை - இந்த
ஐம்பத்தெட்டில் எனக்குள் ஒரு காதல் மலர்ந்தது
மலர்ந்த காதலுக்கு தோழர் அஜய்கோஷே காரணம்

இந்த வயதில் உங்களுக்கு ஏன் இந்த ஆசை
என் மனைவி கடுமையாக எதிர்த்தார்
இந்த வயதில் இவரு ஏன் இப்படி பண்றாரு
இது நண்பர்களின் முணுமுணுப்பு

உங்களுக்கு வேண்டாத வேலை அப்பா
இது என் மூத்தமகளின் எதிர்ப்புக் குரல்
உங்கள் ஆசையே என்  ஆசை அப்பா
இது என் அன்பு மகனின் ஆதரவு அலை


என் காதலில் நான் உறுதியாக இருந்தேன்
வாழ்ந்தால் அவளுடன் என்று தெளிவாக இருந்தேன்
பல்வேறு எதிர்ப்புகளின் மத்தியில்
என் ஆசையும் நிறைவேறியது

உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது
யார் எந்தன் காதலி
பல எதிர்ப்புகள் மத்தியில் - நான்
கரம் பிடித்த என் காதலி யார்

அது வேறு யாரும் அல்ல
உங்களுக்கு நன்கு அறிமுகமானவள்
ஆங்கிலத்தில் அவளை (CAR) கார் என்று அழைப்பார்கள்
தமிழில் அவள் பெயர் மகிழுந்து

வயது முதிர்வு காரணமாக பணி ஒய்வு பெற்ற நான்
ஓட்டுனர் பயிற்சியில்  நன்கு தேர்ச்சி பெற்று -அரசால்
உரிமம் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளேன்
இத்தகைய சாதனைகளை இளைஞனே நீ சாதி

சாதனைகளுக்கு வயதில்லை
சாதனைகளுக்கு காலமில்லை
இளைஞனே நீ மனம் வைத்தால்
நீயும் ஒரு சாதனையாளன் தான்

இளைஞனே நீ சாதிக்கப் பிறந்தவன்
கல்வியில் கணிதத்தில் கலை இலக்கியத்தில்
விளையாட்டில் விஞ்ஞானத்தில் விவசாயத்தில்
அரசியலில் ஆன்மீகத்தில் சாதி நீ சாதி

சாதி              
நீ சாதி
நீ உயர                             
உன் குடி உயர
உன் தெரு உயர
உன் ஊர் உயர
உன் நாடு உயர
இந்த உலகம் உயர
சாதி நீ சாதி

சாதி சாதித்தது என்ன
சாதி இல்லை என சாதி                             
சாதி பொய்மை என சாதி                                                  
சாதி சமூக நோய் என சாதி

என் சாதி ''மனிதன்''
என் சாதி ''தமிழன்''
என் சாதி ''தமிழ்தேசியம்'' - என
அரசு ஏட்டில் பதிவு செய்த
தமிழர்களின் சாதனையை சாதி

சாதிகள் உரசினால்
சவக்குழி நிரம்பும்
சாதிகள் இணைந்தால்
சமத்துவம் வளரும்
சாதிகள் வாழ்வதால்
சாதிப்பது என்ன
சாதி நீ வாழ்க்கையில்
சாதித்தது என்ன
இளைஞனே சாதி நீ சாதி
  
   - மு.மோகனதாஸ்






No comments:

Post a Comment